தங்கள் பள்ளியின் செய்திகள்/நிகழ்வுகள் இந்த தளத்தில் இடம்பெற செய்தி மற்றும் புகைப்படங்களை krishnan.pmv@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.பிற மாவட்ட பள்ளிகளும் அனுப்பலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் RMSA சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி


புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. சிறந்த 24 படைப்புகள் தேர்வு.!


புதுக்கோட்டை,ஜன,12- புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் 2016-2017-ம் கல்வியாண்டிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று 11ந்தேதி(புதன்கிழமை) நடைபெற்றது. கண்காட்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் அவர்கள் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியினை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பேசும்போது கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் 8 தலைப்புகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.இங்கு இடம்பெற்றுள்ள அறிவியல் படைப்புகளில் உணவு என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள படைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் இன்றைய நிலையில் உணவில் கீரை வகைகளின் முக்கியத்துவம் பற்றியும், உண்ணக்கூடிய உணவு, உண்ணக்கூடாத உணவு ஆகியவை பற்றியும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக புகையிலையின் தீமைகளை பற்றியும் மாணவர்கள் விளக்கியிருப்பது சிறப்பானதாகும். மாணவர்கள் தங்களது பாடப்புத்தகத்தில் உள்ள செய்முறை பயிற்சியினையொட்டி அறிவியல் படைப்புகளை இங்கு காட்சிப்படுத்தியிருக்கிறதை பார்க்கும்போது அந்த படைப்புகளை அவர்கள் தெரிந்துகொள்வது மட்டுமின்றி பிறர் தெரிந்துகொள்ளவும் வழியினை ஏற்படுத்தி கொடுத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும். இந்த அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள படைப்புகளின் மூலமாக மாணவர்களின் புரிதல் திறன் மேம்படுகிறது. இதனால் நீட் போன்ற தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். ஆதலால் இதுபோன்ற அறிவியல் கண்காட்சியினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கண்காட்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட, மாவட்டக்கல்வி அலுவலர் ஆர்.சந்தியா, மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் ச.ஜான்பெர்க்மான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை வாழ்த்தி பேசினார்கள்.

இக்கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 36 ஆர்.எம்.எஸ்.ஏ பள்ளிகள், ஆர்.எம்.எஸ்.ஏ ஸ்டெம் அறிவியல் திட்டத்தினை செயல்படுத்தும் பள்ளிகள், ஆர்.எம்.எஸ்.ஏ ஏரியல் கணிதம் திட்டத்தினை செயல்படுத்தும் பள்ளிகள், ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தில் ஆர்.ஏ.ஏ மற்றும் எல்காம் திட்டத்தினை செயல்படுத்தும் பள்ளிகள் ஆகியவற்றில் இருந்து ஒரு பள்ளிக்கு தலா 2 காட்சிப்பொருள் இடம்பெற்றிருந்தது. 

இக்கண்காட்சியில் உணவு என்ற தலைப்பில் 

  1. கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதல் இடத்தினையும், 
  2. வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும்,
  3. கொத்தமங்களம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 

அறிவியல் பொருட்கள் என்ற தலைப்பில் 

சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும், 

மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

திருநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 

நம்மைச்சுற்றியுள்ள வாழும் உலகம் என்ற தலைப்பில் 

புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும்,

காயாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும்,

எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 


நகரும் பொருட்கள் என்ற தலைப்பில் 

கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும், 

குருங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 


பொருட்கள் இயங்கும் விதம் என்ற தலைப்பில் 

ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும், 

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

நார்த்தாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 


இயற்கை காரணிகள் என்ற தலைப்பில் 

ஸ்ரீஅருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும், 

அம்புகோவில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 



இயற்கை வளங்கள் என்ற தலைப்பில்

முள்ளுர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும். 

கே.வி.கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 


கணிதம் என்ற தலைப்பில் 

ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த படைப்பு முதலிடத்தினையும், 

திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த படைப்பு இரண்டாம் இடத்தினையும், 

புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த படைப்பு மூன்றாம் இடத்தினையும் பெற்றன. 


இந்த அறிவியல் கண்காட்சியில் ஒவ்வொரு தலைப்பில் இருந்தும் முதல் மூன்று இடங்கள் வீதம் 8 தலைப்புகளில் இருந்தும் மேற்கண்ட 24 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டன. 


இந்த அறிவியல் கண்காட்சியில் 2016-ல் நோபல் பரிசுபெற்ற அறிவியல் அறிஞர்களின் படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவை தொடர்பான குறும்படமும் திரையிடப்பட்டது. அறிவியல் கண்காட்சியினை மாணவர்கள் கண்டுகளிக்க பேருந்துவசதி செய்யப்பட்டது. இந்த அறிவியல் கண்காட்சியினை 2000 மாணவர்கள் கண்டுகளித்தனர். முன்னதாக அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை கல்வி மாவட்ட, மாவட்டக்கல்வி அலுவலர் உ.பரமசிவம் வரவேற்றுபேசினார். நிறைவாக அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு நன்றி கூறினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சி.பன்னீர்செல்வம், ஜி.ராஜா ஆகியோர் செய்திருந்தனர். 






அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் செய்திருந்த ஒரு படைப்பினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் பார்வையிட்டு பாராட்டியபோது எடுத்தபடம். அருகில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி மற்றும் பலர் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் RMSA சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் RMSA சார்பில்  நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி Reviewed by Unknown on 9:18:00 PM Rating: 5

1 comment:

Powered by Blogger.